Archives: ஜூலை 2018

நம்மைப் போன்ற பாவிகள்

என்னுடைய சிநேகிதியின் பெயர் ஈடித். அவர் தான் இயேசுவைப் பின்பற்ற தீர்மானம் செய்த நாளைக் குறித்து எனக்குச் சொன்னாள்.

ஈடித் தேவனைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டவளல்ல. ஒரு நாள் தன் ஆன்மாவில் ஏற்பட்ட விரக்தியோடு, அந்த ஞாயிறு காலை, தன் வீட்டின் அருகிலுள்ள ஆலயத்தினுள் சென்றாள். அன்றைய தினம் போதகர் வேதாகமத்திலிருந்து வாசித்த பகுதி லூக்கா 15:1-2 “சகல ஆயக்காரரும் பாவிகளும அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், வேதபாரகரும் முறுமுறுத்து, அவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்” என்பதாக வாசிக்கப்பட்டது. ஆனால், அது ஈடித்தின் காதில் “இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஈடித்தையும் ஏற்றுக் கொண்டார்” என்பதாக விழுந்தது. உடனே அவள் தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். சற்று நேரத்தில் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டாள். ஆனால். இயேசு பாவிகளை ஏற்றுக் கொண்டார் என்ற எண்ணமும் அதில் ஈடித்தும் அடங்குவாள் என்ற எண்ணமும் அவளில் தங்கி விட்டது. அன்று மாலை அவள் இயேசுவை நெருங்கி வரத் தீர்மானித்தாள். அவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்தாள். சுவிசேஷங்களை வாசிக்க ஆரம்பித்தாள். தன்னுடைய நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்து அவரைப் பின் தொடர்ந்தாள்.

இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்கள், இயேசு பாவிகளோடு உணவருந்தினார், அநியாயக்காரரோடு சாப்பிட்டார் என்ற உண்மையை அவதூறான செய்தியாகப் பரப்பினர். அவர்களுடைய சட்டம் அவர்களை அத்தகைய ஜனங்களோடு பழகுவதைத் தடுத்தது. ஆனால், இயேசு அவர்கள் உருவாக்கிக் கொண்ட சட்டத்திற்கு எந்த கவனமும் செலுத்தவில்லை அவர் புறக்கணிக்கப்பட்டவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், அவர்கள் எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

இப்பொழுதும் இது உண்மை. இயேசு பாவிகளை ஏற்றுக் கொள்கின்றார்;. உன்னையும் ஏற்றுக் கொள்கின்றார்.

சவால்களை மேற்கொள்ளல்

நாங்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட இலக்கினை அடைந்தனரா என்பதைக் குறித்த கணக்கைக் கொடுக்கும்படி ஒன்று கூடுவதுண்டு. என்னுடைய சிநேகிதி மேரி தன்னுடைய சாப்பாட்டு அறையின் நாற்காலிகளின் இருக்கைகளை அந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க விரும்பினாள். எங்களுடைய நவம்பர் மாதக் கூடுதையில், அக்டோபர் மாதத்திலிருந்து தன் வேலையின் முன்னேற்றத்தை அவர் வேடிக்கையாகத் தெரிவித்தாள். “என்னுடைய நாற்காலிகளைப் புதிப்பிப்பதற்குப் பத்து மாதங்களும் இரண்டு மணி நேரமும் ஆனது” என்றாள். பல மாதங்களாக அந்த வேலைக்கான பொருட்கள் கிடைக்கவில்லை, சரியான நேரம் அமையவில்லை, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளைப் பார்க்க வேண்டியிருந்தது எனப் பல காரணங்கள் அவ்வேலையைத் தடுத்தன. ஆனால், அந்த வேலைக்கென இரண்டு மணி நேரம் மட்டுமே செலவழித்து, முடிக்க முடிந்தது, என்றாள்.

தேவன் நெகேமியாவை ஒரு பெரிய வேலைக்கென்று அழைக்கின்றார். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கின்றது. அதனைக் கட்டி எழுப்ப நெகேமியாவை அழைக்கின்றார் (நெகே. 2:3-5,12).

அவர் ஜனங்களை இந்த வேலையில் வழிநடத்தும்போது, ஜனங்கள் பிறரின் கேலிப் பேச்சையும், தாக்குதலையும், கவனச் சிதறலையும் பாவச் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது (4:3,8; 6:10-12)). ஆனாலும், தேவன் அவர்கள் தங்கள் வேலையில் உறுதியாகவும், தீர்மானத்தோடு முயற்சி செய்யவும், சோர்ந்து போகாமல் தங்கள் வேலையை ஐம்பத்திரண்டு நாட்களில் முடிக்க பெலனளித்தார்.

இத்தகைய சவால்களை மேற்கொள்ள ஒரு தனிப்பட்ட ஆர்வமும் இலக்கையும் விட இன்னும் அதிகமாக ஒன்று தேவை. இந்த வேலை தேவனால் கொடுக்கப்பட்டது என்ற புரிந்து கொள்ளலே நெகேமியாவிற்கு இந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு, அவருடைய ஜனங்களுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய பெலனீந்தது. தேவன் நம்முடைய ஒரு செயலைச் செய்து முடிக்கும்படி பணிக்கும்போது, ஓர் உறவைச் சரிசெய்யும்படி அல்லது அவர் செய்த நன்மைகளை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கும் போது, அவர் நமக்குத் தேவையான திறமையையும், பெலத்தையும் கொடுத்து அவர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கச் செய்கின்றார். நம் பாதையில் நாம் எத்தனை சவால்களைச் சந்திக்க நேரிட்டாலும் அவர் சொன்னதை நிறைவேற்றுவார்.

துக்கத்தில் நம்பிக்கை

நான் பத்தொன்பது வயதாயிருந்த போது என்னுடைய நெருங்கிய சிநேகிதி ஒரு கார் விபத்தில் மரித்துக் போனாள். அதன் பின்னர் வாரங்கள், மாதங்களாக ஒவ்வொரு நாளும் நான் துக்கத்தின் பாதையில் நடந்தேன். ஓர் அற்புதமான சிநேகிதியை இளம் வயதில் இழந்ததினால் ஏற்பட்ட வேதனை என் பார்வையை மறைத்தது. நான் சில வேளைகளில் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே உணராதிருந்தேன். துக்கமும், வேதனையும் என் கண்களைக் குருடாக்கி, தேவனைக் காணக் கூடாதவாறு செய்தன.

லூக்கா 24ல், இயேசுவின் மரணத்திற்கு பின் இரு சீடர்கள் குழப்பமடைந்தவர்களாய், இருதயம் நொறுங்குண்டவர்களாய் நடந்து செல்கையில், தாங்கள் உயிர்த்தெழுந்த இயேசுவோடு நடந்து செல்கின்றோம் என்பதையே உணராதிருந்தனர். இயேசு அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து அவர்களுடைய இரட்சகர் ஏன் மரிக்க வேண்டும், உயிர்த்தெழ வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார். பின்னர் அவர் அப்பத்தை எடுத்துப் பிட்ட போதுதான் அவர் இயேசு என்று தெரிந்து கொண்டனர் (வச. 30-31). இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நேரடியாகப் பார்த்த இயேசுவின் சீடர்களுக்கு இயேசு தன்னை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவராகக் காண்பித்து அவர்கள் மீண்டும் நம்பிக்கை பெறச் செய்தார்.

அந்த சீடர்களைப் போன்று நாமும் குழப்பத்தாலோ, கவலையினாலோ சோர்ந்து காணப்படலாம். ஆனால். இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார். இவ்வுலகிலும், நம்மிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. நாம் இன்னமும் இருதய வேதனையையும் வலியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் போது நாம் இயேசுவை நம்மோடு நம்முடைய வேதனையின் பாதையில் நடந்து வரும்படி அழைப்போம். இயேசு உலகிற்கு ஒளியாயிருக்கிறார் (யோவா. 8:12). அவரே நம் பாதையை மறைக்கும் பனிமூட்டத்தினூடே நம்பிக்கையின் ஒளியைத் தருபவர்.

தேனீக்களும், பாம்புகளும்

சில பிரச்சனைகள் என்றால் தந்தையின் பெயர் அங்கு எழுதப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் என்னுடைய குழந்தைகள் எங்கள் வீட்டின் முன் தாழ்வாரத்தின் பகுதியில், சுவரில் ஏற்பட்ட விரிசலில் தேனீக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே நான் பூச்சி விரட்டும் மருந்தோடு, தேனீக்களோடு போராட சென்றேன். ஐந்து முறை தேனீக்களால் கொட்டப்பட்டேன்.

பூச்சிகளால் கொட்டப்படுதல் எனக்கு விருப்பமில்லாத செயல்தான். ஆனால், என் பிள்ளைகளையோ, மனைவியையோ அவை கடிப்பதைவிட என்னைக் கடிப்பதே மேல். என் குடும்பத்தினரின் நல்வாழ்வுதான் என்னுடைய வேலையின் பிரதான நோக்கமாயிருக்கும். என் குழந்தைகளுக்கு ஒரு தேவையிருந்தால், அவர்கள் என்னைக் கொண்டே செய்யவிரும்புவார்கள். அவர்கள் பயப்படும் காரியங்களில் அவர்களைப் பாதுகாக்க அவர்கள் என்னை நம்பினார்கள்.

மத்தேயு 7ல், இயேசு நமக்குப் போதிப்பது என்னவெனின், நம்முடைய தேவைகளைக் குறித்து தேவனிடம் நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள இயேசு ஒரு விளக்கத்தைத் தருகின்றார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?” (வச. 9-10) ஓர் அன்பு பெற்றோர் எதைக் கொடுப்பார் என நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், இயேசு நம் பிதாவின் தயாள குணத்தின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடக் கூடாதென்பதற்காக “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (வச. 11) என்றார்.

நான் என்னுடைய குழந்தைகளை இதையும் விட அதிகமாக நேசிக்க முடியாதென நினைக்கின்றேன். ஆனால், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பில் மறைந்து போகும் என இயேசு கூறுகின்றார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம். 

 

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.